முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 24


முதற்படி முதலில் படி! - 24

கடந்த சில இதழ்களில் பங்குகளின் மதிப்பைக் கண்டுபிடிக்க உதவும் பலவிதமான ரேஷியோக்கள் பற்றி பார்த்தோம். அதுபோல் வேறு பல குறியீடுகளையும் பார்த்தோம். இவையெல்லாம் ஒரு பங்கை மதிப்பிட, ஒப்பிட உதவும் எளிதான உபகரணங்கள். ஒரு பங்கை அல்லது ஒரு நிறுவனத்தின் மதிப்பை எவ்வாறு கணக்கிட முடியும்?
விரிவாகக் காணும்முன் சில சந்தேகங்களுக்கு பதில் கண்டு விடுவோம். சமீபத்தில் தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒருவர் ஆலோசனைக்காக வந்திருந்தார். ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தை வாங்குவதற்காக அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். நிறுவனத்தை விற்பவர் அந்நிறுவனத்தின் நிகர லாபத்தைப் போல ஐந்து மடங்கு விலை கேட்பதாகச் சொன்னார். என்னிடம் ஆலோசனை கேட்க வந்தவருக்கோ, ஏன் அவ்வளவு விலை கேட்கிறார் என்று புரியவில்லை. வந்திருந்தவரைப் பொறுத்தமட்டில் வாங்கப் போகும் நிறுவனத்தில் உள்ள உபகரணங்களுக்கும், இடத்திற்கும் பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார். தான் புதிதாக அத்தொழிலைத் தொடங்கப் போனால் அவ்வளவுதானே செலவாகும் என்று நினைக்கிறார். அவர் நினைப்பதில் தப்பில்லை. ஆனால், உலகம் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதுதான் உண்மை! ஏன் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறேன்.
நீங்கள் ஒரு வீடு வாங்க நினைக்கிறீர்கள். நீங்கள் வாங்கப் போகும் இடத்தில் அடுக்கு மாடி கட்டட வீடுகள் சதுர அடி 2,500 ரூபாய் என்று விலை போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் நண்பர் அந்த விலைக்குத்தான் அந்தக் கட்டடத்தில் வீடு புக் செய்துள்ளதாகக் கூறுகிறார். பத்திரிகைகளில் பார்த்ததில் அந்த ஏரியாவில் அந்த விலைதான் போவதாகப் போட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அந்த விலை சரிதான் என்று நினைத்து நீங்களும் புக் செய்ய முடிவெடுத்து விடுகிறீர்கள். நீங்கள் செய்தது ஒரு வகையான வேல்யூவேஷன் ஆகும் - சந்தை விலையை வைத்து மதிப்பிட்டுள்ளீர்கள்.
ஒருவகை என்று கூறுகிறீர்களே, அப்படியானால் இதில் வேறு வகை இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.
உண்டு. அந்த வீட்டிலிருந்து உங்களுக்கு எதிர்காலத்தில் வரப்போகும் வருமானத்தை கணக்கிட்டுப் பார்த்து அந்த வீட்டின் விலையை மதிப்பிடலாம். அதேபோல் அந்த வீட்டை நீங்கள் சொந்தமாகக் கட்டினால் எவ்வளவு விலை ஆகும் என்று கணக்கிடலாம். அல்லது நீங்கள் அந்த வீட்டை முதலீட்டிற்காக மட்டும் வாங்குகிறீர்கள் என்றால், ரியல் எஸ்டேட் துறை அடிபடும்போது வாங்கினால் எவ்வளவு குறைவாக வாங்கலாம் என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். இதுபோல் பல வேல்யூவேஷன் முறைகள் உள்ளன.
இதேமாதிரி பங்குகளின் மதிப்பையும் பல்வேறு வேல்யூவேஷன்களின் அடிப்படையில் கணக்கிட முடியும்! பொதுவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை மட்டும் எடுத்துச் சொல்கிறேன்.
1.
பி/ இ மடங்கு முறை.
2.
புத்தக மதிப்பு முறை.
3.
சந்தை மதிப்பு முறை.
4.
புதிதாக அமைக்க ஏற்படும் செலவு கணக்கீட்டு முறை (Replacement Cost Method).
5.
டி.சி.எஃப். முறை (DCF – Discounted Cash Flow).
6.
வொர்ஸ்ட் கேஸ்/பெஸ்ட் கேஸ்.
இந்த முறைகளைப் பற்றி சற்று விரிவாகக் கீழே காண்போம்.
பி/இ மடங்கு முறை:
பி/இ பற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். பங்கின் சந்தை விலையை பங்கின் வருமானத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் பி/இ ஆகும். நீங்கள் வாங்கப் போகும் பங்கின் பி/இ-யை
அத்துறையில் உள்ள மற்றுமொரு பங்குடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீங்கள் வாங்கப்போகும் பங்கின் விலை அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பது தெரியவரும். ஆனால், நீங்கள் ஒப்பிடப்போகும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுப்பதை பியர் குரூப் (Peer Group) உண்டு பண்ணுவது என்று கூறுவார்கள். நீங்கள் வாங்கப் போகும் பங்கும் ஒப்பிட எடுத்துக் கொள்ளும் பங்கும்/பங்குகளும் முதலில் ஒரே துறையில் ஒரே மாதிரியான தொழில்களை செய்து வரவேண்டும். அந்நிறுவனங்களின் விற்பனை (டேர்ன் ஓவர்) போன்றவை கிட்டத்தட்ட சமமாக இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் இந்தியன் பேங்கின் பங்கை வாங்கலாமா என்று நினைக்கிறீர்கள். அது ஒரு பொதுத்துறை வங்கி. இந்த வங்கியை இன்னொரு பொதுத்துறை வங்கியோடுதான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வேறு வங்கிகளுடனோ அல்லது நிதி நிறுவனங்களுடனோ ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல! பொதுத்துறை வங்கிகளிலும், அந்த வங்கிக்கு இணையாக இருக்கும் இன்னொரு வங்கியுடன்தான் ஒப்பிட வேண்டும். இந்தியன் வங்கியை, எஸ்.பி.ஐ உடன் ஒப்பிடுவதும் சரியல்ல. அப்படியானால், இந்தியன் வங்கியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் ஒப்பிடலாமா? தாராளமாக! ஏனென்றால் இரண்டு வங்கிகளும் தென்னிந்தியாவில் தனது கிளைகளை பெரும்பாலும் கொண்டுள்ளது. இரண்டு வங்கிகளின் மொத்த வருமானமும் கிட்டத்தட்ட அருகில் உள்ளது. (இந்தியன் வங்கியின் 31-03-2011-ல் முடிந்த நிதி ஆண்டின் மொத்த வருமானம் 10,543 கோடி ரூபாய்; இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அந்த ஆண்டு மொத்த வருமானம் 13,327 கோடி ரூபாய்).
இதுபோல பொதுவான அளவுகோல்களை வைத்து ஒப்பிட்டு பியர் குரூப் சேர்க்க வேண்டும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் அலகாபாத் பேங்க்கையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வங்கி வடநாட்டில் பெரும்பாலும் தனது கிளைகளை கொண்டிருந்த போதிலும், அதன் மொத்த வருமானம் (மார்ச் 2011) 12,472 கோடி ரூபாயாகும். இதேபோல் கார்ப்பரேஷன் பேங்க், சின்டிகேட் பேங்க், ஓரியண்டல் பேங்க், யூகோ பேங்க் போன்ற வங்கிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது ஒரேமாதிரியான தன்மைகளைக் கொண்ட பியர் குரூப்பை உண்டு பண்ணிவிட்டீர்கள். பியர் குரூப்பின் பி/இ சராசரியை (சமீபத்திய இன்கம் ஸ்டேட்மென்டை வைத்துக் கொண்டு) பாருங்கள். இந்தியன் வங்கியின் பி/இ பியர் குரூப் ஆவரேஜுடனும் மற்றும் மிகவும் நெருங்கிய பேங்குடனும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏன் வித்தியாசப்படுகிறது என்று அலசுங்கள். பிற அளவுகோல்களுடன் (பி/பிவி, டிவிடெண்ட் யீல்ட், வாராக் கடன் சதவிகிதம், வருமான வளர்ச்சி, கிளைகளின் எண்ணிக்கை, ஷேர்ஹோல்டிங் பேட்டர்ன், இன்னும் பிற) ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது வித்தியாசம் ஏன் என்று புரியும். அதை வைத்து இந்தியன் வங்கிப் பங்குகளை வாங்குவது உகந்ததா, இல்லையா என்று முடிவெடுக்கலாம்.
மேலே நாம் கண்ட வேல்யூவேஷன் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு சரிப்பட்டு வரும். ஏனென்றால் அவற்றிற்குத் தேவையான எல்லா விபரங்களும் நமக்கு கிடைக்கும். ஆனால், நீங்கள் சந்தையில் லிஸ்ட் செய்யப்படாத நிறுவனத்தை வாங்கச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட அதே துறை சார்ந்த நிறுவனங்களின் பி/இ ஆவரேஜை எடுத்துக் கொண்டு, வாங்கப் போகும் நிறுவனத்தின் நிகர லாபத்தை அந்த ஆவரேஜ் பி/இ-ஆல் பெருக்கினால் நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் உத்தேச மதிப்பு கிடைக்கும். அதிலிருந்து எவ்வளவு குறைத்து வாங்க முடியுமோ அவ்வளவு நல்லது.
இனிவரும் வாரங்களில் பிற மதிப்பீட்டு முறைகள் பற்றி பார்ப்போம்.
(படி ஏறுவோம்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...