முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதற்படி முதலில் படி! - 5


முதற்படி முதலில் படி! - 5

கடந்த நான்கு இதழ்களில் பங்குச் சந்தை பற்றிய அடிப்படை விஷயங்களைப் பற்றி நான் எழுதியதை படித்த வாசகர்கள் ஏராளமான கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். கேள்விகளை ஒன்றுவிடாமல் படித்தபோது ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. அது, இந்த வாசகர்கள் அனைவரும் பங்குச் சந்தைக்கு மிகப் புதியவர்கள். ஏற்கெனவே அரசல்புரசலாக கேள்விப்பட்ட பங்குச் சந்தை பற்றி இப்போதுதான் முதல் முறையாக விளக்கமாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. எனவே அவர்கள் கேட்ட இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு இந்த இதழில் பதில் அளிக்க விரும்புகிறேன்.


முதல் கேள்வி, திண்டுக்கல்லில் இருந்து செந்தில்குமார் கேட்டிருக்கிறார். ''பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக விரும்புகிறேன். இது சாத்தியமா?'' என்று கேட்டிருக்கிறார். இந்த வாசகர் மட்டுமல்ல, பலரும் இந்த மாதிரி நினைக்கிறார்கள். பங்குச் சந்தை பற்றி நம் மக்களிடம் பரவலாக இரண்டு விதமான கருத்துக்கள்தான் இருக்கிறது. ஒன்று, அது சூதாட்டம். மற்றொன்று; குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகும் வழி. இந்த இரண்டு  அணுகுமுறையும் தவறு. பங்குச் சந்தை முதலீடு நீண்ட கால முதலீடு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். அந்தத் தொழிலைப் பற்றி அனைத்து விஷயங்களையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உங்களுக்கு சில ஆண்டுகள் பிடிக்கிற மாதிரித்தான் பங்குச் சந்தை முதலீடும். எடுத்த எடுப்பி லேயே உங்களால் வெற்றிக் கொடி நாட்டி கோடி கோடியாக குவித்துவிட முடியும் என்கிற கனவு தயவு செய்து வேண்டாம். பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அடைந்த வெற்றியை பற்றித்தான் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் தோல்விகளை பல நேரங்களில் தங்களுக்குள்ளேயே அமுக்கிவிடுகிறார்கள். ஆகவே, குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் நான் பெரும் பணம் சம்பாதித்துவிட்டேன், என்று யாராவது சொன்னால், நம்பவே நம்பாதீர்கள். அது போலவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் 30%, 50% லாபம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. இன்னும் சிலர், எங்கள் சாஃப்ட்வேரை பயன்படுத்தினால், உங்களுக்கு 25% லாபம் உறுதி, என்றெல்லாம் சொல்கின்றனர். அந்த சாஃப்ட்வேரை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்களோ என்னவோ, அவர்கள் நிச்சயம் பணம் சம்பாதித்துவிடுகிறார்கள். உறுதியான லாபம் கொடுக்கும் ஒரு சாஃப்ட்வேரை ஒருவரால் தயார் செய்ய முடியும் என்றால் அதை வைத்து அவரே லாபம் சம்பாதிக்கலாமே! 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய்க்கும் யாரோ ஒருவருக்கு கொடுப்பானேன்? இது மாதிரியாக பங்குச் சந்தையில் யாரும் கோடீஸ்வரன் ஆனவர்கள் இல்லவே இல்லை.  அப்படி ஓரிருவர் ஆகியிருந்தாலும் பின் நாட்களில் அந்தப் பணத்தை கட்டாயம் தொலைத்திருப்பார்.

சுருக்கமாக, குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிப்பது கடினம். அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தோடு பங்குச் சந்தையில் முதலீட்டை மேற்கொள்ளாதீர்கள். அப்படியானால் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததன் மூலம் யாருமே இதுவரை கோடீஸ்வரர் ஆனதில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். வெளிநாடுகளில் வாரன் பஃபட், ஜார்ஜ் சோரஸ், இந்தியாவில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என பல நூறு  கோடீஸ்வரர்களை பங்குச் சந்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இவர்கள் யாருமே குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகி விடவில்லை. பத்து, இருபது ஏன் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ததன் மூலமே கோடீஸ்வரராக ஆகியிருக்கிறார்கள். எனவே, குறுகிய காலத்தில் பங்குச் சந்தை மூலம் கோடீஸ்வரர் ஆகும் ஆசையை விட்டுவிடுங்கள்.

அடுத்த கேள்வியை, விழுப்புரத்திலிருந்து தர்மராஜன் கேட்டிருக்கிறார். ''நான் ஏன் பங்குச் சந்தயில் முதலீடு செய்ய வேண்டும்?'' என்பதே அவர் கேட்ட கேள்வி.
பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. இந்த வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. உணவுப் பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாவசியமான ஒவ்வொன்றும் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக, கடந்த ஆண்டு 10 கொடுத்து வாங்கிய பொருள் இன்று 11. அதாவது 10% விலை உயர்ந்திருக்கிறது. இதைத்தான் நாம் பணவீக்கம் என்று சொல்கிறோம்.
நீங்கள் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் உங்கள் பணம் இந்த பணவீக்க விகித்தைத் தாண்டி வருமானம் கொடுப்பதாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு லட்ச ரூபாய் வங்கி பிக்ஸட் டெப்பாஸிட்டில் போடுகிறீர்கள். 8% உங்களுக்கு வட்டி கிடைக்கிறது என்றால் 10% பணவீக்கத்தோடு அதை ஒப்பிடும்போது உங்களுக்கு 2% வருமான இழப்பு ஏற்படுகிறது. உங்களுக்கு 12% வட்டி கிடைத்தால் பணவீக்கம் 10% போக, 2% வருமானம் கிடைக்கும். ஆனால், வருத்தத்துக்குரிய உண்மை என்னவென்றால், 12% வட்டி கொடுக்கிற வங்கிகள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லிவிடலாம்.


ஆனால், பணவீக்கத்தை வெல்லக்கூடிய ஒரு நல்ல முதலீடு பங்கு சார்ந்த முதலீடு என்பது உலகம் முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. சரியான பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால் உங்கள் வருமானம் நிச்சயமாக பணவீக்கத்தைத் தாண்டியதாகத்தான் இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு இதுவே முக்கியமான காரணம்.
பங்குச் சந்தை முதலீட்டில் ஒவ்வொரு மனிதனும் கட்டாயமாக சிறிதளவாவது ஈடுபட வேண்டும். ஏனென்றால் அந்த முதலீட்டினால் நீங்கள் உலகப் பொருளாதாரத்தோடு உறவு உண்டாக்கிக் கொள்கிறீர்கள். நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள். பல வகையான தொழில்களைப்
பற்றி, நடப்புக்களைப் பற்றி, வாய்ப்புக்களைப் பற்றி, புதிய தொழில்களைப் பற்றி, நிர்வாகம் பற்றி, உலக நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள்.

பங்கு முதலீட்டினால் லாபம் வருவது ஒருபுற மிருக்க, அதன் மூலம் கிடைக்கும் அனுபவம், லாபத்தைவிட முக்கியம். சில மாதங்களுக்கு முன்பு எம்.டி. படித்த டாக்டர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். இந்த சந்திப்பின் நோக்கம் அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய. ஆனால், அவருக்கு தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை. பின்நாட்களில் தொழில் தொடங்கும்போது, பங்கு முதலீட்டின் மூலம் கிடைத்த அனுபவம் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாவது உதவியாக இருக்கும் என்று நம்புகிறார் அவர். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் இப்படி பல நன்மைகள் கிடைக்கும் போது நாம் அதைத் தவறவிடுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்குமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...