முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாபம் கொழிக்கும் பேரீச்சை வளர்ப்பு!





பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம்.  உரிய முறையில் பேரிச்சையை  சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம்  ஏற்பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம்  சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது.  அங்கு சென்று விவரங்களை கேட்டேன்.

நிச்சயம் இதில் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில்,  இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து  கன்றுகளை பெற்றேன்.

முருகம்பாளையத்தில் 2.5 ஏக்கரில் 200 திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடவு செய்தேன். பாலைவனத்தில் விளையும் சாதாரண பேரீச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் திசு பேரீச்சைக்கு தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்று ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். முறையான பராமரிப்பு காரணமாக எங்கள் தோட்டத்தில் 28 மாதங்களிலேயே காய்க்க துவங்கியது. பராமரிப்பு மட்டும் சரியாக இருந்தால் ஒரு ஏக்கரில், மூன்றாம் ஆண்டில்  இருந்து நல்ல வருவாய் கிடைக்கும்.

ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருஷம்தோறும் வருமானம் பார்க்க முடியும். ஆரம்ப கட்ட முதலீட்டை முதல் அறுவடையிலேயே பெற்றுவிடலாம். பிறகு, பராமரிப்பு மட்டும் செய்தால் போதும். வேறு எந்த விவசாயத்திலும் இதுபோன்று லாபம் பார்க்க முடியாது. பேரீச்சையை பொருத்தவரை, டேனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் அதை அப்படியே உட்கொள்ள முடிவதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. இதற்கு முற்றிலும் மாறாக, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி வகை பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம்.

இவை இரும்பு சத்து மிக்கவை. சிறிய விவசாயிகள் இதை பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். விவசாயம் தெரியாத இளைஞர்கள்கூட முறைப்படி கற்றுக்கொண்டால், இது சிறந்த தொழில். கோவை மண்டலத்தில் முதலாவதாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் எங்களது திசு வளர்ப்பு பேரீச்சை பண்ணை உள்ளது. திருப்பூர் கலெக்டர் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு பாராட்டினார்.

முதலீடு

ஒரு பேரீச்சை கன்றின் விலை ரூ.3,500. ஒரு ஏக்கரில் 70 கன்றுகளுக்கான செலவு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம். சொட்டு நீர் பாசன குழாய்களுக்கான செலவு ரூ.30 ஆயிரம். ஆரம்ப கட்ட முதலீடு இவைதான். ஆண்டுக்கொருமுறை இயற்கை உரத்துக்கு ஆகும் செலவு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம். தினசரி தண்ணீர் விட்டு, வண்டுகளை விரட்டவும், கனிகளை பறித்து பேக்கிங் செய்யவும் அதிகபட்சம் 2 பேர் போதும். கைக்கு எட்டும் தூரத்தில் பழங்கள் இருப்பதால், பறிக்க நிறைய பேர் தேவையில்லை. இவர்களுக்கு கூலி வருடத்துக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.

லாபம்!

பயிர் செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்க துவங்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சீசன். ஒரு மரத்துக்கு 5 முதல் 7 குலைகள் வரை தள்ளும். ஒரு குலையில் 10 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். சராசரியாக ஒரு மரத்துக்கு 60 கிலோ கிடைத்தாலும், ஏக்கருக்கு 4200 கிலோ கிடைக்கும். கிலோ 300 ரூபாய்க்கு விற்றால், ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கிடைக்கும். உரம், பராமரிப்பு, கூலியாட்கள் செலவு, பேக்கிங் செலவு போக வருடத்துக்கு சுமார் 10 லட்ச ரூபாய் லாபம் பார்க்கலாம். தென்னை மரத்தை விட அதிகமாக 75 வருடங்களுக்கு மேல் விளைச்சல் இருக்கும். ஆண்டுகள் ஆக ஆக பழங்களின் எடையும் அதிகரிக்கும். ஆர்டரின்பேரில் குஜராத்தில் இருந்து நாற்றுகளை வாங்கி கொடுத்து கமிஷன் பெற்றும் வருமானம் ஈட்டலாம்.

சந்தை வாய்ப்பு!

உலக பேரீச்சை உற்பத்தியில் 36 சதவீதம் இந்திய சந்தையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி இன்னும் ஒரு சதவீத அளவைக்கூட எட்டவில்லை. இதனால் பேரீச்சைக்கு சந்தை வாய்ப்பு இங்கு பிரகாசமாக இருக்கிறது. பழங்களை உள்ளூர் வியாபாரிகளும், நகரங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். ஒருமுறை இதன் சுவை அறிந்தவர்கள் தேடி வந்து வாங்குவார்கள். கால், அரை, ஒரு கிலோ பாக்கெட்களாக விற்கலாம். குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இதை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம்.

பயிரிடும் முறை!

ஒரு ஏக்கரில் சுமார் 70 கன்றுகளை நடலாம். ஒரு கன்றுக்கும் மற்றொன்றுக்கும் குறைந்தது 8 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப் பம் போதுமானது. சொட்டுநீர் பாசன முறையில் ஆரம்பத்தில் தினசரி ஒரு மரத்துக்கு 50 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். படிப்படியாக இதை அதிகரித்து, நன்கு வளர்ந்த மரத்துக்கு தினசரி 300 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். மரத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல், வடிகால் அமைக்க வேண்டும்.

மருந்து கூடாது!

வண்டுகளால் மரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். இதை தடுக்க எவ்வித மருந்தும் தெளிக்க கூடாது. மரத்தில் இருந்து பழங்களை பறித்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் மருந்து தெளிக்க கூடாது. தோட்டத்துக்கு 2 ஆட்களை நியமித்து, கண்காணிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு வண்டுகள்தான் வரும். இதை அப்போதே கண்டுபிடித்து கொன்று விடுவது முக்கியம். இல்லையென்றால் வண்டுகள் தொல்லை அதிகரித்து விடும். இயற்கை உரமே இட வேண்டும். பேரீச்சை பழுத்ததும் வவ்வால், பறவைகளால் சேதம் ஏற்படாமல் இருக்க குலையை சுற்றி பாலிதீன் கவர்களால் மூட வேண்டும்.

பர்ரியின் சிறப்புகள்!

பிஞ்சு முதல் பழம் வரை 6 நிலைகளாக பர்ரி பேரீச்சை பிரிக்கப்படுகிறது. 19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம் 3வது நிலை. இது கலால் எனப்படுகிறது. இதை மரத்தில் இருந்து பறித்தவுடன் அப்படியே சாப்பிடலாம். பர்ரி என்றால், அரபு மொழியில் பெரியது என்று அர்த்தம். பெரிய காய்களுடன் கூடிய பேரீச்சை என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஈராக். ஜோர்டான் நாட்டில் இந்த பர்ரி ரக பேரீச்சையை ‘கோல்டன் டேட்ஸ்’ என்று அழைக்கிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பழங்களை 3 மாதம் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

தலையணை உறை.. தூள் கிளப்பும் லாபம்

பெண்கள்  வீட்டு வேலை  போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வி. அவர் கூறியதாவது: கணவர் ஆட்டோ டிரைவர். குடும்ப வருமானம் போதவில்லை. அதை சமாளிக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றேன். வீட்டிலேயே பழைய தையல் மெஷின் வாங்கி போட்டு, ஜாக்கெட், சுடிதார் தைத்து வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் 13 பேர் சேர்ந்து அம்மன் சுய உதவி குழு துவக்கினோம். ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதன்மூலம் ஈரோட்டில் தலையணை உறை துணி வாங்கி வந்து தைத்தேன். அவற்றை கணவர் கடைகளுக்கு எடுத்து சென்று விற்று வந்தார். பின்னர் நானே ஆட்டோவில் ஏற்றி அபார்ட்மென்ட்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைத்தது. முழு நேர தொழிலாக தற்போது தலையணை உறை தயாரிக்கிறேன். இத...